கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடி படகுகள் திசைமாறி சென்றுள்ளன
நிலவும் சீரற்ற வானிலையுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் படகுகள் திசைமாறி சென்றுள்ள சில சம்பவங்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளன.
கடல் கொந்தளிப்பு காரணமாக திசைமாறி வந்த தமிழக படகொன்று யாழ் காரைநகர் மாதகல் பகுதியில் கடற்படையினரால் நேற்று மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த படகில் இருந்த மூன்று மீனவர்களும் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
இந்த தமிழக மீனவர்கள் மூவரையும் வட்டுக்கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். பருத்திதுறையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று மீனவர்களுடன் பருத்திதுறையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்றே நேற்று மாலை காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதுதவிர, கடற் பிராந்தியங்களில் நிலவும் கடும் காற்று காரணமாக தென்பகுதி மீனவப் படகொன்று வடக்கு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த படகொன்றே சேதமடைந்த நிலையில் இன்று அதிகாலை கரையொதுங்கியதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
விசாரணைகளின் பின்னர் படகுடன் கரையொதுங்கிய தென்பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments :
Post a Comment